கிராமத்து அரட்டை அரசியல் --- 5
கி.அ.அ.அனானி அனுப்பிய தொடரின் ஐந்தாவது பாகம்:
****************************
"என்னண்ணே....அப்சலை தூக்குல போடக்கூடாது அப்படீன்னு முதலமைச்சர் கூட சொல்லிட்டாரே" மலையாண்டி சொன்னவாரே வந்தான்.
"ஆமாமா...காஷ்மீர் முன்னாள்... இந்நாள் ரெண்டு பேரும் சொல்லியிருக்காங்க...அதுல இன்னாள் முதல்வர் தூக்குல போட்டா கலவரமாயிடும் அப்படீன்னு சொன்னார்...ஆனா முன்னாள் முதல்வரோ ஒரு படி மேல போயி நீதிபதி உயிருக்கு உத்திரவாதமில்லை அப்படீன்னு பகிரங்க மிரட்டலே விட்டுட்டாரு"என்றார்
"அட நா அவுகளைச் சொல்லலைண்ணே...நம்ம முதல்வர் சொல்லியிருக்குறதை சொன்னேன் " என்றான்
"அப்படியா " என்றான் அப்போதுதான் வந்த மணி.
"ஆமா...நேரடியா அப்சலை குறிப்பிட்டு சொல்லலை..ஆனா முரசொலியில கேள்வி பதில் பகுதில " நமக்கு நாமே திட்டத்துல" அவரே அவரை கேள்வி கேட்டுக்கிட்டு பதில் எழுதுவாரே அதில்"மரண தண்டனை பற்றி உங்கள் கருத்தென்ன? " அப்படீங்கற கேள்விக்கு " கடுமையான குற்றமிழைத்தவனுக்கு மரணம் தண்டனைன்னா..அதில் அவன் அனுபவிக்கும் வலி ரொம்ப குறைவாகத்தான் இருக்கும்...அது தவறு செய்தவனை அவனுடைய தவறை நினைத்து வருந்தும் சந்தர்ப்பத்தை அவனுக்கு அளிக்காது செய்துவிடும்..அதனால் மரண தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் "அப்படீன்னு பொருள் படும்படி சொல்லியிருக்காரு "என்றான் மலையாண்டி
"ஆமாமாம்...இதை அவர் இப்ப மட்டும் சொல்லலியே...ராஜிவ் காந்தி கொலை வழக்குல தூக்கு தண்டனை தீர்ப்பானப்பவும் சொன்னாரு" என்றார் மூக்கையண்ணன்
"இப்ப என்னண்ணே ஆகும்..அப்சலை தூக்குல போட்டுருவாங்களா...மாட்டாங்களா? "
"டேய்.... அவனுடைய கருணை மனு ஜனாதிபதி அப்துல் கலாம் கிட்ட போயிருக்கு..அதைப் பார்த்து அவர் என்ன முடிவெடுக்குறாரோ அதுதான்" என்றார் மூக்கையண்ணன்
"அவர் சொந்த முடிவில்லிங்க....அவர் காபினெட் மந்திரி சபைக்கு பரிசீலனைக்கு அனுப்புவாரு..அவங்க என்ன சொல்ராங்களோ அதுதான் ஜனாதிபதி முடிவு அப்படிங்கற பேரில் கருணை மனு ஏற்பு அல்லது தள்ளுபடி அப்படீன்னு வெளியாகும் " என்றான் அங்கு வந்த காலேஜ் படிக்கும் மணிகண்டன்.
"அடேடே..அப்படியா...இது தெரியாம நான் இத்தனை நாளா கருணை மனுவின் மீது ஜனாதிபதி முடிவெடுப்பாருன்னுல்ல நினைச்சுக்கிட்டிருந்தேன்" என்றான் மலையாண்டி.
"இதுல வேடிக்கை என்னன்னா அரசியலமைப்பு சட்டத்துல 72ஆம் பிரிவில் "ஜனாதிபதிக்கு மன்னிக்க முழு அதிகாரம் உள்ளது" அப்படீன்னு இருந்தாலும் மற்ற விஷயங்களைப் போலவே ஜனாதிபதி மந்திரி சபை என்ன முடிவு எடுக்குதோ அதனடிப்படையிலேதான் செயல் படுவார்..."
"அப்ப சட்டு புட்டுன்னு முடிவாயிடும்னு சொல்லு" என்றான் மணி
"அதுதான் இல்லை...இந்த அப்சல் கேசுக்கும் முன்னாலெயே மொத்தம் 20 கருணைமனு முடிவெடுக்கப்படாமல் அப்துல்கலாம் கிட்ட இருக்குதாம்..அதுல ராஜிவ் காந்தி கொலை வழக்குல மரண தண்டனை பெற்ற 3 பேர், 1993-ல் பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் தலைவரை கொல்ல பாம் வச்சு 9 பேரை அப்புக்கு அனுப்புன ஆளு, பஞ்சாப்புல முன் விரோதம் காரணமா ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேரை கொன்ன 4 பேர் அப்புறம் நம்ம வீரப்பன் கூட்டாளிங்க 5 பேர் எல்லார் மனுவும் இருக்கு"
"நம்ம சந்தன வீரப்பன் கூட்டாளிங்களா...எதுக்கப்பா" என்றான் மணி
"என்ன சித்தப்பு.... வீரப்பன் உங்க பங்காளி மாதிரி...நம்ம வீரப்பனா...அப்படீன்னு கேக்குறீங்க" என்று கிண்டலடிந்தான் மணிகண்டன்
சிரித்த மூக்கண்ணன் " இவங்க கட்சி போராட்டத்தும் போது இவனும் புகுந்து புறப்பட்டு ரெண்டு மூணு மரத்தை வெட்டிப் போட்டானுல்ல..அதான் மரம் வெட்டுறவனையெல்லாம் பங்காளியா நெனைக்கிறான் போல" என்றார்
"ஆமா..சந்தனவீரப்பன்கூட்டாளிகளேதான்...சைமன், ஞானப்ரகாசம், மீசேகர்,மாதையா, பில்வேந்திரன் அஞ்சு பேருடைய கருணை மனுதான் ...கண்ணி வெடி வச்சு 21 போலிஸ்காரங்களை தூக்குனாங்கல்ல அந்த கேசுல மரண தண்டனை குடுத்தாங்க " என்ற மணிகண்டன்
"இதெல்லாம் இவர் காலத்துதில்லையாம்...இவருக்கு முன்னால இருந்தாருல்ல கே.ஆர்.நாராயணன் அவரு முடிவெடுக்காம விட்டுட்டு போன 12 கேசு..இவர் ஜனாதிபதியானப்புறம் தீர்ப்பான 8 கேசு எல்லாம் சேத்து 20 இருக்கு. கே.ஆர்.நாராயணன் எந்த கருணை மனு மேலையும் முடிவெடுக்காம அப்படியே விட்டுட்டு போயிட்டாரு...அப்துல் கலாம் ஒரே ஒருத்தனை தூக்குக்கு அனுப்பினாரு...போன வருஷம்.... தனஞ்சய் சாட்டர்ஜி அப்படீன்னுட்டு ஒருத்தன் வங்காளத்துல சின்னப் பொண்ணை ரேப் பண்ணி கொன்னுட்டான்..அது மட்டும் மந்திரி சபை பரிந்துரை பேருல கருணை மனு நிராகரிச்சுட்டாரு..அவனை 14-8-2005 ல் தூக்குல போட்டாங்க ...மீதி கேசெல்லாம் அப்படியே இருக்கு "
"அது சரி..அந்த தனஜ்சய் சாட்டர்ஜியை தூக்குல போட்ட போது நம்ம முதல்வர் கருத்து ஏதும் சொன்னாரா? என்றான் மலையாண்டி
"அதுதான் அதுக்கு முந்தியே ராஜிவ் கொலை வழக்கு தீர்ப்பின் போதே மரண தண்டனை தப்பு அப்படீன்னு தெளிவா சொல்லிட்டாரே ...ஒவ்வொரு கேசுக்குமா தனித்தனியா சொல்லுவாரு" என்றார் மூக்கையண்ணன்
"இப்ப மட்டும் திடீர்னு ஏன் கருத்து சொல்ராரு..அண்ணே சந்தனம் கெடைச்சா எடுத்து பூசுவோம்..சாணி கிடைச்சா பூசுவோமா...அதுமாதிரிதான்...தனஞ்சய் சாட்டர்ஜியை தூக்குல போட்டது கூட பாதி பேருக்கு தெரியாது..அதுனால அப்ப கருத்து கிடையாது...ஆனா அப்சலை தூக்குல போடக்கூடாதுன்னு சொன்னாதான மைனாரிடி ஓட்டு கிடைக்கும் அதுனால நேரடியா சொல்லாம தூக்கு தண்டனை தப்பு ...மரண தண்டனை தப்பு... அப்படீன்னு ஸ்டேட்மென்ட் உட வேண்டியது...இதுல "" கடுமையான குற்றமிழைத்தவனுக்கு மரணம் தண்டனைன்னா..அதில் அவன் அனுபவிக்கும் வலி ரொம்ப குறைவாகத்தான் இருக்கும்...அது தவறு செய்தவனை அவனுடைய தவறை நினைத்து வருந்தும் சந்தர்ப்பத்தை அவனுக்கு அளிக்காது செய்துவிடும்."" அப்படீன்னு வியாக்யானம் வேற...வேண்ணா ஒண்ணு பண்ணலாம் ..இனிமே அங்கங்க பாம் வக்கிறவனை கூப்பிட்டுட்டு வந்து மந்திரியாக்கிரலாம்...அவங்களும்...'ஆகா...இவங்கள்ளாம் ரொம்ப நல்லவங்க " அப்படீன்னு வடிவேலு கணக்க சொல்லுவானுங்க' என்றான்" ஆவேசம் வந்தவனாக மலையாண்டி.
அவனை சமாதானப் படுத்தியபடியே கூட்டம் கலைந்தது.
*******************************
### 249 ###
7 மறுமொழிகள்:
சூப்பர்:)
//சிரித்த மூக்கண்ணன் " இவங்க கட்சி போராட்டத்தும் போது இவனும் புகுந்து புறப்பட்டு ரெண்டு மூணு மரத்தை வெட்டிப் போட்டானுல்ல..அதான் மரம் வெட்டுறவனையெல்லாம் பங்காளியா நெனைக்கிறான் போல" என்றார்
//
யோவ் ;)
ஏங்க...shravan
கூப்டீங்களா? :)
பாலா அவர்களே..பதிவை பதிப்பித்து வருவதற்கு நன்றி.
கி.அ.அ.அனானி
நல்ல பதிவு பாலா
கி.அ.அ.அனானி...எனக்கும் ஒரு பதிவு எழுதி அனுப்ப கூடாதா?:-))
"""கி.அ.அ.அனானி...எனக்கும் ஒரு பதிவு எழுதி அனுப்ப கூடாதா?:-))"""
நன்றி செல்வன்...
அடுத்த பதிவை உங்களுக்கு அனுப்பட்டுமா ? சீரியசா கேட்குறேன்.
என்னை......டேய்....அடங்குடா...... அப்படீங்குது என் மனசாட்சி :) ஆனா இதையெல்லாம் பாத்தா முடியுமா..:))
கி.அ.அ. அனானி
Shravan, CT, Selvan, கி.அ.அ. அனானி,
anaivarukkum nanRi :)
அடுத்த பதிவை உங்களுக்கு அனுப்பட்டுமா ? சீரியசா கேட்குறேன்.//
Dear K.A.A Anony,
Sure. Defenitely send me a pathivu.
I am out of town till nov 10th. I will publish it once I come back or you can send it after nov 10th.
Regards
selvan
Post a Comment